காலை ஜெபம்
PSALM 112
MORNING PRAYER
திருப்பாடல் : 112
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.
(திருப்பாடல் 112: 1-2. 4-5)
ஜெபம்
அன்பும், கனிவும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகின்றோம். வாழ்த்துகின்றோம். ஆராதிக்கின்றோம். நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! இந்த அதிகாலை வேளையில் உம் குரலுக்குச் செவிசாய்க்கிறேன். உம்மையே பற்றிக்கொள்கிறேன். ஏனெனில் நீரே எனது வாழ்வு; நீரே என் நீடிய வாழ்வு.
தந்தையே! கடந்த காலங்களில் நான், அனுதினமும் தொடரும் என் வாழ்வியல் துன்பங்களை எண்ணி சலிப்படைந்து புலம்பிய நாட்கள் ஏராளம். என்னுள் அவ்வப்போது எழுந்து மறையும் அசுவிசுவாசத்தின் வெளிபாடே அது. மனமிரங்கி மன்னித்தருளும். 🙏
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.” என்று கூறிய எம் இயேசுவே! ஒருவர் தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொண்டு உம்மைப் பின்பற்றுவது என்பது அவர் தம்முடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடவுளாகிய உமது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு இணையாகும். எனவே ஆண்டவரே! நாங்கள் அவ்வாறு வாழ்வதற்கு எங்கள் உடலையும், உள்ளத்தையும் செம்மைப்படுத்தியருளும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
