காலை ஜெபம்
PSALM 65

MORNING PRAYER
திருப்பாடல் : 65
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. – புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!
(திருப்பாடல் 65: 9-13)
ஜெபம்
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! விடுதலை அளிப்பவரே! விரும்பிக் கேட்பவற்றைக் கொடுப்பவரே! உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் புகழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்.
இறைவா, உம்முடைய இறைவார்த்தையை முழுவதுமாக உள் வாங்கி அதன்படி செயல்படக் கூடிய நல்ல இதயத்தை எனக்குத் தந்தருளும். என் இதயம் கடினமான பாறை போன்றோ, முட்புதர்கள் நிறைந்த நிலமாகவோ இல்லாமல் விதை ஊன்றி நன்கு வளர்வதுக்கு தகுந்த நல்ல நிலமாக இருக்க அருள் புரிவீராக.
ஆண்டவரே, விதைத்த விதைகள் நன்கு வளர்வதற்க்கு உகந்தவாறு என்னை அவ்வப்போது பண்படுத்தும். அப்போது உமது விருப்பத்திற்கிணங்க நான் நூறு மடங்கு பலன் கொடுக்க தகுதியுள்ள உமது பிள்ளையாக மாறுவேன்.
