Psalm 51-

MORNING PRAYER, PSALM 51

Spread the love

MORNING PRAYER

GOD BLESS

PSALM 51

காலை ஜெபம் –

திருப்பாடல் : 51

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

(திருப்பாடல் 51: 1-2. 6-7. 10-11. 12,15)

✝️ ஜெபம் ✝️

நேர்மையைக் கதிரொளி போலும், நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்பவரே!
உம் மக்களின் உள்ளத்து விருப்பங்களை உளமார நிறைவேற்றுபவரே!
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை உறுதிப்படுத்துகின்றவரே!
உம்மை உளமார போற்றுகின்றேன். உவகையோடு வாழ்த்துகின்றேன். உள்ளன்போடு நன்றி கூறுகின்றேன்.

தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

இறைவா, இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் அனுதினமும் நான் சந்திக்கும் எண்ணற்ற சவால்களை சமாளிக்கத் தேவையான மன உறுதியை தூய ஆவியானவர் வழியாக எனக்கு அளித்தருளும்.

“என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.” என எங்களுக்குக் கூறி எங்களுக்கு மனத்திடம் தந்தவரே உமக்கு நன்றி.

“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.” என்ற இறைவார்த்தைகள், இறைவா! என் இதய சிந்தனையில் இரவு பகலாக இயங்குவதாக!
ஏனெனில், இயேசுவே! “இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” என நீர் கூறி இருக்கிறீர்.

இயேசுவே! உமது அறுவடை நாளில் நான் முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு பலன் தரும் நல்ல நிலத்தில் விழுந்த விதையாக இருக்க அருள் புரிவீராக!

இறைவா, இன்று விஷேசமாக தூய ஆவியின் துணையைத் தேடாமல் மன உறுதியற்ற நிலையில், மனத் துணிவின்றி, மனம் சோர்வுற்ற மனிதர் அனைவருக்காகவும் வேண்டுகிறேன்.

அவர்கள் இறுதிவரை மன உறுதியில் நிலைத்திருந்து உம்மால் மீட்படைய உம்மை வேண்டுகின்றேன்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *