காலை ஜெபம்
MORNING PRAYER

PSALM 94
திருப்பாடல் : 94
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். ‘ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை’ என்கின்றனர். மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்? செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ? ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர்.
(திருப்பாடல் 94: 5-10. 14-15)
ஜெபம்
எங்கள் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றவரே! எங்கள் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றவரே! எங்களுக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவரே! இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மைப் போற்றுகிறோம். துதிக்கிறோம். ஆராதிக்கிறோம். நன்றி கூறுகிறோம்.
தந்தையே! தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் திளைத்திருந்த ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் உம்மை நீர் வெளிப்படுத்தாமல், எளிமையான, தாழ்ச்சி உள்ளம் கொண்ட உம் சீடர்களிடமே உம்மை நீர் வெளிப்படுத்தினீர்.
தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானவரே! இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டவரே! நான் வாழ்வில் தாழ்ச்சியற்று இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மனமிரங்கி மன்னித்தருளும்.
தாழ்ச்சியையும், கீழ்படிதலையும் நான் அன்னை மரியாளிடமிருந்து கற்றுக் கொள்ளவும், அதை என் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் செயல்படுத்தவும் அருள் புரிவீராக. ஏனெனில் நீர் விண்ணகத்திலும், தாழ்ச்சி கொண்டோரின் தூய உள்ளத்திலும் குடி கொண்டு இருக்கிறீர்.
தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம் என்னோடு என்றும் இருக்க அருள் புரியும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
