காலை ஜெபம்
திருப்பாடல் : 119
ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது.
தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!
(திருப்பாடல் 119: 89-91,130. 135,175)
🛐 ஜெபம் 🛐
என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகிறேன். நன்றி கூறுகிறேன். நேற்றைய நாள் முழுவதும் என்னைக் காத்து வழிநடத்திய உம் கிருபைக்காக நன்றி.
தந்தையே உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
இறைவா, எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே ! நீர் விதைத்த இறையாட்சி இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக.
உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை அளித்தமைக்கு நன்றி.
மீட்பின் தேவனே! இன்று விஷேசமாக, வாழ்ந்து மரித்த எங்கள் வாழ்வின் சிற்பிகளான எங்கள் ஆசிரியர்கள், ஞான வழிகாட்டிகள் ஆகியோரின் நித்திய இளைபாற்றிக்காக மன்றாடுகிறேன்.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நான் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.