MORNING PRAYER

காலை ஜெபம்
திருப்பாடல் : 145
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.
திருப்பாடல் : 145: 2-9
ஜெபம்
அன்பும், இரக்கமும், பரிவும், கனிவும் மிக்க எங்கள் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறோம். புகழ்கிறோம். ஆராதிக்கிறோம். நன்றி கூறுகிறோம்.
இந்த காலை வேளையில் உம்மை நினைக்க, துதிக்க, ஆராதிக்க எங்களுக்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தந்தையே!
இயேசுவே, அன்று இரத்தப் போக்குடைய பெண்ணைப் பார்த்து “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று.” என்று கூறி பரிபூரண சுகமாக்கினீர். இறைவா உன் மேல் நம்பிக்கைக் கொண்ட அனைவரையும் நீர் தொட்டு குணமாக்கிட நாங்கள் உம்மை இறைஞ்சு வேண்டுகிறோம்.
இயேசுவே, கனானியப் பெண்ணின் ஆழமான நம்பிக்கையையும், தொழுகைக்கூடத் தலைவனின் அசைக்க முடியாத விசுவாசத்தையும் நாங்களும் கொண்டிருக்க அருள் புரிவீராக.
இறைவா இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
