MORNING PRAYER

PSALM 145
காலை ஜெபம் –
திருப்பாடல் : 145
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.
(திருப்பாடல் 145: 1-2. 8-11. 13ab-14)
🛐 ஜெபம் 🛐
எல்லாம் வல்ல எம் ஆண்டவரே! சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றவரே! வலிமை இழந்தோர்க்கு ஊக்கம் அளிப்பவரே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகிறேன். ஒரு தாய் தன் சேயை அன்போடு நோக்குவது போல், இந்த இரவு முழுவதும் என் அருகில் இருந்து என்னை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய நாளை எனக்கு வாய்ப்பாகக் கொடுத்து இருக்கிறீர். உமக்கு நன்றி அப்பா! 🙏
இறைவா, என்னைவிட எளியோரிடம் நான் கனிவற்று நடந்து கொண்ட நேரங்களுக்காகவும், தற்பெருமை என்னும் தீய ஆவியினால் மனத்தாழ்ச்சி அற்று இருந்த தருணங்களுக்காகவும் உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் அகில உலகைப் படைத்த நீரே, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ” என கூறியிருக்கின்றீர்.
இறைவா ! இன்று விஷேசமாக தங்களது வாழ்வியல் துன்பங்களைத் தாங்காது மனப்பாரங்களால் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்காக வேண்டுகிறேன். அவர்களது மனச்சுமைகளை இறக்கி அவர்களது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் அளியும். இயேசுவே! அவர்களது இருண்ட வாழ்வில் ஒளியேற்றும்.
இறைவா இந்த ஒய்வு நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் காத்து வழி நடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
