Site icon Life Setter Saluja

MORNING PRAYER

MOR.PRAYER

                                                                          MORNING PRAYER

MOR.PRAYER 1

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

(திருப்பாடல்கள் 23:1-6)

✝️ஜெபிப்போமாக :🛐

எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்துவை தொட்டறிந்து கிறிஸ்துவின் மீது நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்து பறைசாற்ற பேறுபெற்ற தூயவரே, எம் பாரத பூமியில் நற்செய்தியை ஆர்வமுடன் போதித்த போதகரே.! தப்பறைகளை உடைத்த திருத்தூதரே..!, இறைவனின் அருளால் பல வாரங்களை இந்திய மக்களுக்கு அளித்து கிறிஸ்துவின் அன்பை விதைத்த புனிதரே..! இந்த காலை வேளையில் உம்மோடு உறவாட வந்துள்ளேன். என்னை ஆசீர்வதித்தருளும். என் உள்ளத்தின் குரலை கேட்டு எனக்கு உதவியருளும்.

இறைவனை அறிந்து நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர் என மொழிந்து அவர் வழியில் நடந்த புனித தோமையாரே..!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள எங்களை, கடன் தொல்லை, தொழிலின்மை போன்ற இக்கட்டுகளில் இருந்து பாதுகாத்தருளும். உமது பரிந்துரை வழியாக துன்பம், வறுமை, அவமானம், ஏமாற்றம் ஆகியவற்றால், வாடி நிற்கும் எங்களுக்கு உதவியருளும். வறுமையால் துயருற்று அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.

எங்கள் அன்புக்குரிய புனித தோமையாரே..! இறைவனின் சித்தம் எதுவெனக் கண்டு, எப்பொழுதும் நீர் பரிசுத்தமாக நடந்தது போல, நாங்களும் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப எப்போதும் நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும், தீமையை அகற்றி தூயோராய் வாழவும்; மக்கள் யாவரும் மெய்யங் கடவுளைக் கண்டறிந்து தக்க முறையில் அவரை வழிபடவும், எங்களுக்காக இயேசு ஆண்டவரிடம் வேண்டியருளும்.

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசிர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற, எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசியருளும்.

உமக்கு திருவிழா எடுத்து கொண்டாடும் இவ்வேளையில், எங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்களை எப்போதும் தீயோனிடமிருந்து காத்திடுமாறு வேண்டுகிறோம். சாத்தானின் வஞ்சக சூழ்ச்சியில் நாங்கள் விழாமல் உம்மீது விசுவாசத்தில் நிலைத்திட உம்மை மன்றாடுகிறோம்.

🙏🏻ஆமென்.🙏🏻

Exit mobile version