காலை ஜெபம்

MORNING PRAYER
திருப்பாடல் : 89
முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தில் மாபெரும் மன்னன் ஆக்குவேன்.
(திருப்பாடல் 89: 19-21. 26-27)
ஜெபம்
ஈசோப்பினால் எங்களைக் கழுவிய எம் கடவுளே! பாவக்கறைகளை துடைத்த எம் தெய்வமே!
நீரே எம் தந்தை, நீரே எம் இறைவன், நீரே எம் மீட்பின் பாறை!
இறைவா! நேற்று முழுவதும் எங்களோடு நீர் வாசம் செய்து ஒரு தாயாக இருந்து எங்களை ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக் கொண்ட உமது மேலான கிருபைக்காக நன்றி அப்பா! 🙏
ஆண்டவரே ! சட்டங்கள், சம்பிராதாயங்கள், சடங்குகள் ஆகியற்றிற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து சக மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முதன்மையான இடத்தைக் கொடுக்காமல் நாங்கள் விலகி இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றோம்.
இயேசுவே, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை.” என கூறி இருக்கிறீர். இன்று பல்வேறு இடங்களில் அதிகாரத்தில் இருப்போர் இரக்கத்தை புறந்தள்ளி சட்டதிட்டங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டு எளியோரின் தேவைகளை மறுக்கின்றனர். இறைவா! சீடர்களின் தேவைகளை அறிந்து அவர்களின் சார்பாக நீர் இருந்தது போல நாங்களும் எளியோரின் சார்பாக நிற்க அருள் புரிவீராக.
கானாவூர் திருமண விழாவிலும், எலிசபெத்திற்கும் தகுந்த வேளையில் நம் அன்னையவள் உதவிக்கரம் நீட்டியது போல நாங்களும் நடந்து கொள்ள அருள் புரிவீராக.
இறைவா! அன்று நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்த எசேக்கியாவின் மேல் இரக்கம் கொண்டு அவரின் ஆயுள் ஆண்டுகளை நீர் நீட்டித்துக் கொடுத்தது போல இன்று உம் இரக்கம் நாடி உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுக்களை கனிவாய் செவிசாய்த்தருளும்.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
