MORNING PRAYER

காலை ஜெபம்
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.
பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.
என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
(திருப்பாடல்கள் 71:5-8)
மண்ணில் வாழ் மக்கள் ஒன்றாக கூடி, விண்ணில் வாழ் அன்னையை போற்றுவோம்
மனித இதயத்தை, இறைவனுக்கு அர்பணித்த தேவதாய், தன்னலம் இல்லாத தாய், மண்ணில் வாழ் மக்களை காப்பவள்.
அம்மா மரியே, உத்தரிய அன்னையே! இதோ இந்த காலை வேளையிலே, உம்மிடம் பேச வந்துள்ளேன். உம்மோடு உறவாட வந்துள்ளேன். எனது உள்ளத்தில் உள்ளவற்றை, உம்மோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். என்னை ஆசீர்வதித்தருளும், என்னோட பேச வாரும், என் உள்ளத்தின் குரலை கேளும், உமது இதயத்தின் அன்பால் என்னை அரவணைத்துக் கொள்ளும்.
அம்மா மரியே, கடவுளின் தாயே! சிறு வயது முதலே, கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டீரே! இதோ இந்நாள் வரை, பிறருக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்! உமது இரக்கமிகு பரிந்துரையினால், எண்ணற்ற ஆன்மாக்களை விண்ணகத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறீர்.
அம்மா! இவ்வுலக மக்களின் பாவங்களால், நீர் மிகுந்த வேதனை அடைந்தீர். உமது மகனைப் போலவே, நீங்களும் எங்கள் மீது ஆன்ம தாகம் கொண்டீர். உம் மகனைப் போல, உமது இதயம் அன்பால் பற்றி எரிகிறது. எண்ணற்ற பாவிகள் வேதனை தீயில் இருந்து மீண்டு, உமது அன்புத்தீயில் ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறார்கள். நன்றி அம்மா!
கார்மேல் தாயே! நாங்களும் ஒரு நாள் உம்மோடு விண்ணகத்தில், மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்வோம் என்ற நம்பிக்கையில் இவ்வுலகில் பயணம் செய்கிறோம். எங்கள் நம்பிக்கையில் நாங்கள் நிலைத்து நிற்க, எங்களுக்கு உதவி செய்யும். பாவ சூழ்நிலைகள் அனைத்திலிருந்தும் எங்களை காத்தருளும்.
அம்மா, உமது இரக்கமிகு பரிந்துரையை முன்னிட்டு, உமக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் பாவங்களில் இருந்து நாங்கள் மீண்டுவர, எங்களுக்கு உத்தரியம் எனும் மாபெரும் கொடையை பரிசாக அளித்துள்ளீர்கள். நீங்கள் தந்துள்ள உத்தரியத்தின் மான்பை உணர்ந்தவர்களாய், உமது வழியை நாங்களும் பின்பற்றி, எங்கள் மனமாற்ற வாழ்க்கையின் மூலம், இறுதிநாளில் விண்ணகத்தை அடைய உதவி புரியும் அம்மா. இதன்மூலம் எங்களுக்கு தேவையான உடல், உள்ள ஆன்ம நலன்களை, நாங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் எங்களுக்காக பரிந்துரை செய்தருளும்.
தூய உத்தரிய தாயே! என்னையும் என் குடும்பத்தையும், உமது பாதத்தில் வைக்கிறேன். எங்களை பாதுகாத்து, ஆசீர்வதித்து வழிநடத்தும்
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
