PSALM 27

MORNING PRAYER

Spread the love

MORNING PRAYER

காலை ஜெபம்

PSALM 27

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; “நீரே என் கடவுள்” என்று சொன்னேன்.

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்; என்னை வெட்கமுற விடாதேயும்; பொல்லார் வெட்கிப்போவார்களாக! பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!

(திருப்பாடல்கள் 31:14-17)

உலகை படைத்த ஒரே இறைவனின் அன்னையே! விண்ணக அரசியே! இதோ இந்த காலை வேளையிலே உம்மோடு பேசவும், உமது துயரத்தில் பங்கெடுக்கவும், அதை பகிர்ந்து கொள்ளவும் வந்திருக்கும் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

அம்மா! சிலுவை அடியில் உயிரற்ற உமது மகனை, உமது மடியில் கிடத்தி வைத்தார்கள். அப்போது உமது மனது சொல்ல முடியாத துயரத்தில் இருந்திருக்கும், அம்மா எதற்காக இந்த துயரம்? அதை நானே தியானிக்கின்றேன்…

உலகில் எந்த தாய்க்கும் கிடைக்காத துயரம், உமக்கு கிடைக்கபட்டது.

தன்னை பிடிக்க வந்தவனின் காதை, பேதுரு வாளால் வெட்டியபோது, அதை குணமாக்கிய உமது மகனை, அவரது கைகளிலும் கால்களிலும், ஆணிகளை வைத்து சுத்தியால் ஓங்கி அடிக்கும்போது, நீர் பட்ட துன்பத்தை எவ்வாறு எடுத்து கூற முடியும்???

முடக்குவாதமுற்ற ஒருவரை, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்று சொல்லி, முடக்கு வாதத்தை குணமாக்கிய உமது மகனை இன்று, சிலுவை மரத்தில் அசைய முடியாமல் ஆணிகளால் அடிக்கபட்டு, இரத்தம் வழிந்த உமது மகனை கண்ட போது, நீர் பட்ட துன்பத்தை யாரால் தாங்க முடியும்???

பன்னிரண்டு வயது ஆன, இறந்துபோன ஒரு சிறுமியின் கையைப் பிடித்து “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்று கூறி உயிர்ப்பித்த, உனக்கென இருந்த அந்த ஒரே மகனை, இன்று சிலுவையில் அறையப்பட்டு இறப்பதை காணும்போது, நீர் பட்ட துன்பத்தை யாரால் அதை உணர முடியும்???

பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய், பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறியதை கேட்ட நீர், இன்று சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று அதே மக்கள் கூறுவதையும் நீர் கேட்கும்போது, நீர் பட்ட துன்பத்தை யாரால் அதை பொருத்துகொள்ள முடியும்???

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று, தன் மகன் ஆண்டவர் என, நீர் கேட்ட வார்த்தைகளையும், இன்று ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப் பட்டவனுமானால், தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்று கேலிசெய்த வார்த்தைகளையும் இப்போது கேட்கும்போது, நீர் அனுபவித்த துயரத்தை யார் பகிர்ந்துகொள்ள முடியும்?

அன்று, இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, எருசலேம் கோவிலில் அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து, பேசிய உமது மகனை கண்ட நீர் இன்று, கள்வர்கள் நடுவில் சிலுவை மரத்தில் தொங்கும் உமது மகனை பார்க்கும் போது, நீர் அனுபவித்த வேதனையை யார் ஏற்றுகொள்ள முடியும்?

உனக்கென இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே! அவரையும் சிலுவையில் பலிகொடுத்து, தனியே தவித்த உம்மை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறோம் அம்மா.

அம்மா! இப்படி உமது துயரத்தை சொல்லிகொண்டே போகலாம். இதெல்லாம் எங்களுக்காகதான், எங்கள் பாவங்களுக்காக தான். எங்களுக்கு உமது மகனிடமிருந்து, மன்னிப்பை பெற்றுதாரும் அம்மா.

அம்மா! இனி நாங்கள் பாவம் செய்ய மாட்டோம் என்று கூறுவதை தவிர, வேறு என்ன சொல்லி உம்மை நாங்கள் ஆறுதல் படுத்த முடியும்?

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *