காலை ஜெபம்
MORNING PRAYER

அர்ப்பண ஜெபம்
கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மைத் துதித்து ஆராதிக்கின்றேன்.
என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் அவ்வப்போது உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.
இறைவா, என் தாய், தந்தையினுடையவும், முன்னோர்களுடையவும் அனைத்துலக மக்களின் பாவப் பரிகாரத்திற்காகவும் ஆன்மாக்களின் மீட்பிற்காகவும் இந்த அர்ப்பணத்தை நீர் ஏற்றருளும்.
பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.
என் இயேசுவே, உம்மை அன்பு செய்யவும், உம்மீதுள்ள அன்பின் பொருட்டு நீர் விரும்பும் எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவும் எனக்கு ஆற்றல் தாரும். உமது அன்பிலிருந்து என்னை வேறுபடுத்துகின்ற எல்லாவிதமான ஊனுடல் பலவீனங்களையும், விசுவாசத்திற்கும் பரிசுத்தத்திற்கும் எதிராக வருகின்ற சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக சக்தியை நீர் எனக்குத் தந்தருளும்,
எனது அனைத்துச் செயல்களிலும் உமது அருளும், ஆசீரும் பொழிந்தருளும். அனைத்தையும் நன்றாக துவங்கவும், நன்றாக முடிக்கவும் எனக்கு ஆற்றல் தந்தருளும். மரணம் என்னை நெருங்குகையில் அந்த பலவீனமான நேரத்தில் வலுவான சோதனைகள் என்னை வேதனைப்படுத்தும்போது என் இயேசுவே, நீர் வந்து எனக்கு உதவிடவும், என் ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவும் வேண்டுகிறேன்.
ஆமென்.
