MORNING PRAYER
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
எசாயா 12 : 2-6
ஜெபம்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருபவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே! தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துபவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கிறோம்.
ஆண்டவரே! தாழ்ச்சியிலும், தூய அன்பிலும், பிறரன்பு பணியிலும் அன்னை மரியாளை உதாரணமாக எங்கள் அனைவருக்கும் அளித்தீர். ஆனால் அகம்பாவம், ஆணவம், சுயநலம், கடும்சினம் ஆகிய அலகையின் அஸ்திரங்களினால் அவ்வப்போது நான் வீழ்ந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இரக்கத்தின் இறைவா! உன் அன்பு பிள்ளையாகிய என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.
ஆண்டவரின் தாயாகிய அன்னை மரியா, எங்களுக்காக பரிந்து பேச, எங்களுக்காக மன்றாட, எங்களுக்காக இரக்கம் கொள்ள பாவிகளாகிய நாங்கள் யார்? அகில உலகுக்கும் அன்னையவளை எங்களுக்குத் தாயாக தந்த எங்கள் தந்தையே உமக்குக் கோடி நன்றி.
இயேசுவே! நீர் கூறியவற்றை அனைத்தும் நாங்கள் செய்வதே அன்னையவளுக்கு நாங்கள் செலுத்தும் உண்மையான அன்பு. அது ஒன்றே அவளை என்றென்றும் மகிழ்விக்கும்.
ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம் என்றென்றும் போற்றப்படுவதாக.