GOD BLESS BLESS

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

GOD BLESS BLESS

 

திருப்பாடல் : 63

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

(திருப்பாடல் 63: 1-5,7-8)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்த அன்பின் ஆண்டவரே! இந்த காலை வேளையில் உம்மையே என் சிந்தை நாடுகின்றது. உம் திருமுகத்தைக் காண என் மனம் ஏங்கித் தவிக்கின்றது. படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

உயிர்த்த எம் இறைவா! தூய ஆவியை எங்களுக்குள் அனுப்பி எங்களுக்கு துணிவையும், ஞானத்தையும் தந்தருளும். அலகையின் அனைத்து சூழ்ச்சிக்களில் இருந்தும் எங்களை தப்புவியும். அன்று கல்லறைத் தோட்டத்தில் மகதலா மரியா உம்மைக் கண்டு கொண்டது போல நாங்கள் இன்று சந்திக்கும் நபர்களில் உம்மைக் கண்டு கொள்ள அருள்புரியும். உலக காரியங்களில் நாங்கள் பற்று கொள்ளாமல் இறை வார்த்தைக்கே முக்கியத்துவம் அளிக்க அருள் செய்யும்.

இரக்கத்தின் இறைவா!
‘நம்பிக்கையின் திருத்தூதர்’ என அழைக்கப்படும் புனித மகதலா மரியாவை நினைவுகூறும் இந்நாளில், பாவ சேற்றில் மூழ்கி அதில் சிக்கித் தவித்து அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் எண்ணற்ற மக்களுக்காக விஷேசமாக வேண்டுகிறோம். அவர்கள் அனைவரும் பாவங்களைக் களைந்து மனம் மாறி அன்பின் பிள்ளைகளாக உமது பாதையில் நடக்க மன்றாடுகிறோம்.

காலை ஜெபம்

 

காலை ஜெபம்

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்; அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை; அவர்களின் நா கூர்மையான வாள் போன்றவை. கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!

திருப்பாடல்கள் 57:1-5

என் அன்புக்குரிய இயேசு கிறிஸ்துவே, கடந்த இரவு முழுவதும் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை, உமது தெய்வீக ஆசீரால் பாதுகாத்து, இப்புதிய நாளை காண செய்த இறைவா! உம்மை வாழ்த்தி போற்றி ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

இயேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன். படுக்கையில் இருந்து எழுந்தது போல பாவத்தை விட்டெழுந்து, மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத்தருளும் இறைவா!

என் துன்ப நேரத்திலும், ஆபத்துக் காலத்திலும் என் ஆன்மாவைத் தூக்கி நிறுத்தி, என் பலவீனத்தை பலப்படுத்தி, என் எதிரிகளின் எல்லா தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் துணிவை அளித்து, நல்லவராகிய என் கடவுளிடமிருந்து என்றும் பிரியாதிருக்க உமது வல்லமை அளித்தருளும்.