MOR.PRAYER

MORNING PRAYER, காலை ஜெபம்

காலை ஜெபம்

MOR.PRAYER 1

“ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்”.

(திருப்பாடல் 116: 12-18)

என் அன்புக்குரிய இயேசு கிறிஸ்துவே, இந்த காலை வேளையில், என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும், புதிய கட்டளையை அளித்த எங்கள் ஆண்டவரே, நான் பிறரிடத்தில் எந்த பலனையும் எதிர்பார்க்காது, தூய அன்பை செலுத்த எனக்கு அருள் புரியும்.

சீடர்களுக்கு பாதம் கழுவி, தாழ்ச்சியை வெளிப்படுத்திய என் தேவனே!, நான் ஆணவம், திமிர் ஆகியவற்றை விட்டுவிட்டு, தாழ்ச்சியை மட்டும் கைக்கொள்ளும், மேலான வரத்தை எனக்குத் தந்தருளும்.

இன்று, எங்களுக்காக குருத்துவத்தை தோற்றுவித்த தந்தையே! தங்கள் வாழ்க்கையை உமக்காக அர்ப்பணித்த அனைத்து குருக்கள் மற்றும் கன்னியர்களுக்காக விஷேசமாக வேண்டுகிறோம். உம்மை மட்டுமே நம்பியிருக்கும் அவர்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். அலகைக்கு எதிரான போராட்டத்தில், உமது அருட்பணியாளர்களுக்கு என்றென்றும் ஜெயத்தினைத் தந்தருளும். அவர்களுக்கு எதிரான, அலகையின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்துப் போடும். அவர்களது இறைப்பணியை பரிபூரணமாக ஆசீர்வதித்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

காலை ஜெபம்

காலை ஜெபம்

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.

சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.

(திருப்பாடல்கள் 18:1-5)

விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவனுக்கு எல்லா புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும் – ஆமென்!

இரக்கம் நிறைந்த விண்ணக தந்தையே! இதோ இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம்! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது அன்பிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

விண்ணக தந்தையின் மகனாகிய இறைவா! மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பிக்க, மனிதனாகவே பிறந்த தெய்வமே! உம்மை நோக்கி இந்த நேரத்தில் மன்றாடுகின்றோம்; இவ்வுலகில் நீர் சீடர்களோடு சகோதரர்களாகவும், நண்பர்களாகவும், வாழ்ந்தீர்; நாங்களும் அவ்வாறு நண்பர்களுடனும், சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறோம். ஆனால், வெளிவேடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனதுக்குள் பகை உணர்வு, வெறுப்பு கொண்டு வாழ்கிறோம். எங்களின் வெளிவேடமான வாழ்க்கை, எங்களை மேலும் அன்புறவில் இருந்து பிரிக்கிறது, இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். எங்களுக்குள் எந்தவித பிரிவினையும் வேண்டாம், மனக்கசப்பும் வேண்டாம். ஒருவர் மற்றவர்களை மன்னிக்கும், நல்ல மனதை எங்களுக்கு தந்தருளும்.

ஆண்டவரே! எங்களை துன்புறுத்திய அனைவருக்காகவும், இந்த நேரத்தில் வேண்டுகிறோம். அவர்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம் அப்பா! அவர்கள் தங்களது தீய வழிகளை விட்டுவிட்டு, உண்மையின் பாதையில் வழிநடக்க அவர்களுக்கு துணை செய்வீராக!

இவ்வாறு உலகெங்கும் உள்ள உமது பிள்ளைகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக எப்போதுமே வாழும் வரத்தை வேண்டி, இப்போது ஜெபம் செய்கிறோம். ஆண்டவரே! எங்கள் மீது இரங்கும், இரக்கம் வையும், நாங்கள் பலவீனமான மனிதர்கள், எங்களது குறைகளை மன்னியும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

காலை ஜெபம் ,திருப்பாடல் : 33

காலை ஜெபம் 

திருப்பாடல் : 33

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

(திருப்பாடல் 33: 2-3. 10-11. 18-19)

ஜெபம்:

தாழ்ந்தோரை உயர் நிலைக்கு உயர்த்துபவரே! எங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவரே! எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் எங்களுக்குத் தருபவரே! உம்மை இந்தக் காலை வேளையில் போற்றுகிறோம். துதிக்கிறோம். ஆராதிக்கிறோம். நன்றி கூறுகிறோம். 🙏

ஆண்டவரே! அன்று காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தனது சகோதரர்களால் அடிமையாக மிதியானியரிடம் விலைக்கு விற்கப்பட்ட யோசேப்பை பார்வோன் மன்னனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தினீரே! புறக்கணித்த கல்லை மூலைக்கல்லாக மாற்றிய ஆண்டவரே உமக்கு நன்றி. 🙏

“நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.” என்று கூறிய எங்கள் இயேசுவே! அன்று மிகச் சாதாரண மக்களை சீடர்களாகத் தேர்ந்து கொண்டு அவர்களுக்கு அதிகாரம் அளித்து பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் செய்தீர். நீர் முன்குறித்து வைத்தோரை அழைத்தீர். நீர் அழைத்தோரைத் உமக்கு ஏற்புடையவராக்கினீர். உமக்கு நன்றி இறைவா! 🙏

இந்த சமூகத்தில் சாதாரண மனிதர்களாகிய எங்களை அழைத்து, உமது அருளாலும், ஆற்றலாலும் எங்களை வல்லமை மிக்கவர்களாக மாற்றியருளும். உமது இறைத்திருவுளத்தை நிறைவேற்றும் சிறந்த கருவிகளாக எங்களை மாற்றியருளும்.

ஆமென்.

விண்ணகத்தில் இருக்கிற…(1)
அருள் நிறைந்த…(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்…(1)

காலை ஜெபம்

காலை ஜெபம்

ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.

உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.

என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.

என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.

பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.

(திருப்பாடல்கள் 69:16-20)

கருணையே உருவான இறைவா! இதோ இந்த காலைப்பொழுதில், உம்மோடு பேச உறவாட வந்திருக்கும் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

அளவிட முடியாத அன்பால், என்னை தேற்றுகின்ற இறைவா! உமது பாதம் என் சிம்மாசனம், உமது காலடி என் வாழ்வின் சன்னதி, உமது வார்த்தை என் உயிர்மூச்சு.

கருணையின் உருவமாகிய இறைவா! உமது கருணை மிகவும் பெரியது, எங்களால் அளவிட முடியாதது, இந்த பாவியின் மேல் உமது இரக்கத்தை பொழிந்தருளும், உமது கருணையின் கடலில் என்னை மூழ்கச் செய்யும்.

உமது அன்பிலிருந்து விலகி சென்ற நேரம், என் வாழ்வின் இருளின் நேரம்; உமது பார்வையிலிருந்து விலகிச்சென்ற நேரம், என் வாழ்வின் துன்ப நேரம். ஆண்டவரே! என்னை நினைவில் வையும், என்னை கருணையுடன் பார்த்தருளும்.

அப்பா! இவ்வுலகில் உமது பிள்ளைகள் சந்திக்கும் இன்னல்களை நீர் அறிவீர். எங்களை காக்கிறவர் நீர் ஒருவரே! நீர் இல்லாமல் ஒரு நொடி கூட என்னால் வாழ முடியாது அப்பா. எங்கள் மேல் மனமிரங்கும்.

அன்பு நேசரே! அன்பின் வடிவமே! என் கடவுளே! என்னோடு இரும், தினந்தோறும் என் வாழ்க்கை பயணத்தில், நான் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளிலும், என்னை வழிநடத்தும். காத்தருளும். நன்றி ஆண்டவரே!

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.ஆமென்.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 16

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

(திருப்பாடல் 16: 1-2, 5. 7-8. 11)

ஜெபம்:

என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏

இயேசுவே, “முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.” என கூறியிருக்கிறீர்.

நாங்கள் பிறரை குற்றம் காணும் போதும், பிறரது குறைகளை சுட்டிக் காட்டும் போதும் எங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையை மறந்து விடுகிறோம். மன்னித்தருள்வீராக.

இயேசுவே இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழி நடத்தும். இன்று என் வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும், நன்மை , தீமை அனைத்தையும் இயேசுவே உமது மாசில்லா திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

காலை ஜெபம்

காலை ஜெபம்

முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்.

‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?” எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.

தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.

இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

(திருப்பாடல்கள் 4:5-8)

✝️ஜெபிப்போமாக:🛐

ஒவ்வொரு நாளும் என்னை காத்து, வழிநடத்துகிற அன்பு ஆண்டவரே! இந்தக் காலைப் பொழுதினிலே உம்மை போற்றி, புகழ்ந்து ஆராதனை செய்கின்றோம்!

ஒவ்வொரு நாளும் உமது மேலான இரக்கத்தை முன்னிட்டு, எங்களை மன்னிப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!

அப்பா! ஒவ்வொரு நாளும் எங்களை இரக்கத்தோடு கண்ணோக்குவதாலே, நாங்கள் இந்நேரம் வரை நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். நன்றி அப்பா!

என் ஆண்டவர் என்னோடு இருக்கும் பொழுது, நான் எதற்காக அஞ்ச வேண்டும்; கலங்க வேண்டும் என்று, உள்வாங்கும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தாரும். அப்பா! நாங்கள் நன்மை செய்தாலும், அது எங்களுக்கு தீமையாகவே நிகழ்கிறது.

அப்பா! எங்கள் வெளித்தோற்றத்தை பார்க்காமல், எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருப்பதை பார்ப்பவர் நீர் ஒருவரே. அப்பா! யார் எங்களை குற்றம் சாட்டினாலும், உமக்கு எல்லாம் தெரியுமே. எங்கள் உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும், வருத்தங்களையும் தெரிந்தவர் நீங்க ஒருவரே!

அப்பா! நீங்க எங்க கூட இருக்கும் போது, அற்ப மனிதர்கள் எங்களுக்கு எதிராக என்ன தான் செய்ய முடியும்? இறைவா! பிறர் எங்களை வேதனை படுத்தும்போது, அவர்களை மன்னிக்கும் தன்மையை எங்களுக்கு தாரும்.

என் அன்பு இறைவா! எங்களை வெறுக்கும் அனைவரையும், நாங்கள் அன்பு செய்ய வரமருளும். எங்கள் மீது வைத்துள்ள தவறான எண்ணங்களை அவர்கள் மாற்றி கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் எங்களுக்கு வரமருளும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 117

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.

(திருப்பாடல் 117: 1,2)

ஜெபம்

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை போற்றித் துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் இன்று உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.

இறைவா, இன்றைய ஞாயிறு திருப்பலியை பக்தியோடு பங்குபெற்று உமது திருவுடலை விசுவாசத்தோடு பெற்றுக் கொள்ளும் அனைத்து மக்களையும் நீர் ஆசீர்வதிப்பீராக. பல்வேறு பிணிகளால் வருந்தும் பலரை உமது திருக்கரங்களால் தொட்டுக் குணமாக்கிடும். உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். 🙏

இறைவா, இந்த புதிய வாரத்தில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.🙏

ஆண்டவரே! நன்மை தீமைகளை பகுத்தறியும் நல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும். மேலும் தூய ஆவியானவர் என்னுள் தங்கியிருக்க, என்னுள் இருந்து செயலாற்ற அருள் புரிவீராக. 🙏

காலை ஜெபம்

காலை ஜெபம்

திருப்பாடல் : 149

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது.

(திருப்பாடல் 149: 1-6a,9b)

ஜெபம்

தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைபடுத்தும் என்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! எல்லாவிதமான புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவர் நீர்! இந்த காலை வேளையில் தந்தையே உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம்.

இறைவா, புதிய வாரத்தில் துவக்கத்திலிருக்கும் எங்களுக்கு இந்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அறிவுறுத்தும். இந்த வாரம் முழுவதும் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் எங்களுக்குக் கிடைக்கப் பெற அருள் புரிவீராக.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.” என இறைவா எங்களை அழைத்தீர்.

இயேசுவே, நீர் ஒருவர் மட்டுமே உலகின் ஒளி என்பதை மக்கள் உணர்ந்தவர்களாய் உம் பாதையில் எந்நாளும் நடந்திட அருள்புரிவீராக.

குருட்டு வழிகாட்டிகளை நம்பி, ஒளியென நினைத்து அவர்கள் பின்னே இருளை நோக்கிப் பயணம் செய்யும் எண்ணற்ற நபர்களின் அகக் கண்களைத் திறந்தருளும். அவர்கள் செய்து கொண்டிருக்கும் தவறினை அவர்களுக்கு உணர்த்தியருளும். அலகையின் கைகளில் இருந்து அந்த ஆன்மாக்களைப் பாதுகாத்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 128

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!

(திருப்பாடல் 128: 1-5)

ஜெபம்

எங்களோடு என்றும் இருக்கும் எங்கள் விண்ணக தந்தையே! முடிவில்லா அன்பை எங்கள் மேல் வைத்து, எங்களைத் தொடர்ந்து அன்பு செய்பவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

இறைமகனே! எங்கள் இனிய இயேசுவே! உம் பாதத்தில் நாங்கள் அமரும் போதெல்லாம், எங்கள் வலுவின்மையை நீக்கி, இனம்புரியாத ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருபவரே! உமது பிரசன்னம் தான் எங்களுக்கு ஆறுதல். உமது அரவணைப்பு தான் எங்களுக்கு தேறுதல். உமது பார்வை தான் எங்களுக்கு பரவசம். உமது இறைவசனம் தான் எங்களுக்கு ஆனந்தம்.

அன்பு இயேசுவே! “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.” என்று கூறினீரே! நாங்கள் அவர்களைப் போல அல்லாமல் உமது கிருபையை எங்கள் செயல்களில் நாங்கள் வெளிப்படுத்த அருள் புரியும்.

இறைவா, நாங்கள் எளியோருக்கு இன்னும் அதிக அளவில் உதவிடவும், அவர்களுக்கு ஆதரவாய் என்றும் இருந்திடவும் எங்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து தந்தருளும். ஏனெனில் “ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்.” என நீர் கூறி இருக்கின்றீர்.

அப்பா, எங்களது வாழ் நாளெல்லாம் எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் உண்மையான தாழ்ச்சியுடன் இருக்க அருள் புரிவீராக! ஏனெனில் “தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” என நீர் கூறி இருக்கின்றீர்.

இப்புதிய நாளில் எங்களை நினைவு கூர்ந்து இருமடங்கு ஆசீரும், மகிமையும் அளித்து, எல்லாவித நெருக்கடியினின்று எங்களை விடுவித்து, உமது அன்பை விட்டு நாங்கள் என்றும் பிரியாதிருக்க அருள்புரியும்.

இயேசு மரி, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென். †

காலை ஜெபம்

காலை ஜெபம்

திருப்பாடல் : 146

யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார்.

(திருப்பாடல் 146: 5-10)

ஜெபம்

விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவரே! பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றவரே! சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றவரே! பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே! தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றவரே! இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்தி, போற்றித் துதித்து ஆராதனை செய்கிறோம்.

ஆண்டவரே! என் வாழ்வில் நான் எனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூராமல் இருந்த பல தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இரக்கத்தின் தேவனே! என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.

அனைவருக்கும் அன்புக் கட்டளைகளை அளித்தருளிய எங்கள் அன்பர் இயேசுவே! “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என நீர் கூறியிருக்கின்றீர். அவ்வாறு நான் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் ஆண்டவராகிய உம்மை நான் என்றென்றும் அன்பு செய்து உமது முதன்மையான கட்டளையை நான் என்றும் செவ்வனே நிறைவேற்ற அருள் புரிவீராக.

நான் என்னையே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்யக் கூடிய தூய உள்ளத்தினை ஆண்டவரே எனக்குத் தந்தருளும். இதன் மூலம் நான் உமது இரண்டாவது கட்டளையை அனுதினமும் நிறைவேற்ற அருள் புரிவீராக.

இயேசுவே! இந்த நாளை நான் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உமது அன்பை எனக்கு அடுத்திருப்பவருக்கு பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவியாக நான் விளங்கவும் அருள் புரியும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.