NIGHT PRAYER
இரவு செபம்..
அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம்.
பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.
தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும். பிறருடைய கடைமைகளிலே, நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.
எங்கள் பெற்றோரிடமும், சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும், பிள்ளைகளிடமும் மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால், எங்களை மன்னியும்.
தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும். நாளை காலை மீண்டும் எழுந்து, உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.