காலை செபம்
MORNING PRAYER

“அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். ‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்”!
(திருப்பாடல் 66: 1-7)
அன்பே உருவான எம் இறைவா! உம்முடைய இரக்கப் பெருக்கத்தினால், மற்றொரு புதிய நாளை காணச்செய்த உமது மேலான அன்பிற்காக நன்றி. தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதிக்கின்றேன்.
என் அன்பு இயேசுவே! இந்தக் காலை வேளையில், உம்மை எண்ணியே என் உள்ளம் நாடுகிறது.
“என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” எனக் கூறிய இயேசுவே, உம்மையே நாடுகிறேன், தேடுகிறேன், நம்பிக்கை கொள்கிறேன்.
நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும், நிலைவாழ்வை அடைய வேண்டும் என்ற, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வந்த எங்கள் இயேசுவே !நாங்கள் கபடமற்ற மனமுடையவர்களாக வாழவும், நாங்கள் முழுமனதோடு உம்முடைய பிரசன்னத்தில், உம் அன்பில், எப்போதும் நிலைத்திருக்கவும் வரமருளும்.
உமது அளவுகடந்த ஞானத்திற்கேற்ப, இன்று என்னை பயன்படுத்தும். உம்மோடு உமக்காக வாழ்வதே, எனக்கு கிடைக்ககூடிய மாபெரும் பேறு எனப் புரிந்துக்கொண்டு வாழ இறைவா! எனக்கருள் புரியும்.
இயேசு மரி, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
