MORNING PRAYER
காலை ஜெபம்
திருப்பாடல் : 105
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.
(திருப்பாடல் 105: 1,5. 8-9. 24-27)
🛐 ஜெபம்🛐
எப்போதும் எங்களை அரவணைக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே! உம்மை இந்த அதிகாலை வேளையில் வாழ்த்தி போற்றி ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உம்மை மகிழ்விப்பதே எங்கள் இதயத் துடிப்பாகட்டும். உமது கட்டளைகளை நாங்கள் கடைபிடிப்பதே எங்கள் உயிர் மூச்சாகட்டும்.
ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.
““பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”என கூறிய எம் இயேசுவே! நிலையான, மகிழ்வான இளைப்பாறுதல் உம்மிடம் மட்டுமே உள்ளன.
மீளாத் துயரம், கண்ணீர், கடும் வேதனை ஆகியவற்றின் நடுவே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் துன்ப துயரங்களை நீர் அறிவீர். அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து உம் திருக்கரங்களால் அரவணைத்து அவர்களைத் தேற்றும் எங்கள் தகப்பனே! அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்யும்.!